Sunday, July 23, 2006

04 : உதிர்ந்த சிறகும்... ஒட்டிய வண்ணமும்!

முன்குறிப்பு : பயணக்கட்டுரைகள் பிரிதொரு சமயம்... இப்போதைக்கு ஒரு சிறுகதை?!

இன்றல்லவே உன்னை முதன்முதல் பார்ப்பது. உன் புன்னகையில் சினேகம் தோன்றிய தினம் நிச்சயம் இன்றல்ல. உன் வார்த்தைகளில் இந்த வாத்சல்யம் வெகுகாலமாகவே இருந்திருக்க வேண்டும். உன் பேச்சில் உள்ளர்த்தத்தோடு எனக்கான செய்தி எப்போதுமே பொதிந்திருக்கிறது.

சமீபகாலமாக என் மனதின் நிரப்பப்படாத சில பள்ளங்களில் கருமுட்டைகள் தென்படுகின்றன. உன் துப்பட்டா உரசல்களாலும், சிற்சில பிரத்யேகமான சந்திப்புகளாலும், அச்சமயங்களில் நேர்ந்த உணர்வு பகிர்தலாலும் இஃது நேர்ந்திருக்கலாம்.


என் மனதை அரித்துத்தின்று உன் நினைவுகள் வளர்கின்றன. சீக்கிரமே உன்னிடம் வந்து என் மனம் காணாமல் போயிற்று எனலாம், எந்த சுவடுமே இன்றி என் மனதை அவ்வளவு விரைவாக தின்று தீர்க்கின்றன உன் நினைவுகள்.

நிரப்பப்படாத என் மனதின் பள்ளங்களை உன் வருகை நிரப்பும் என்று எண்ணியிருந்தேன். என் மனமிருந்த இடத்தையே பள்ளமாக்கும் விஷயம் வெகு தாமதமாகவே உறைத்தது எனக்கு. காலம் கடந்து விட்டதடி இப்போது, உன் நினைவு என்னில் நீக்கமற நிறைந்து விட்டது. பேச்சு வெகுவாய் குறைந்து போயிற்று நம்மிடையே, பார்வை பரிமாறிவிடுகிறது எண்ணங்களை.


என் கவிதைகளையெல்லாம் தின்று வளர்ந்தன உன் நினைவுகள் காதலாய். பார்வைப் பரிமாறல், புரிதல் எல்லாம் சரி. ஆனால் புரிந்துகொண்டவை எல்லாம் சரியா, தவறா? எச்சில் கூட்டி, எச்சில் விழுங்கி, எச்சில் விழுங்கி தயக்கக்கூடு எனைச் சூழ்கிறது. உன்னிடம் நான் சொல்லாத வார்த்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து எனை மிரட்டுகின்றன.

உன் கண்களுக்கு சூரியப் பிரகாசம் வந்து விட்டதாய், கண்கள் காணவே தயங்குகிறேன். உன் கொலுசொலி கேட்டால் என் ஜீவன் பதறுகிறது.

உன்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் இரவெல்லாம் தூங்காது விடியலுக்கு முன்னே எழுந்து வருவேன். உனை சந்திக்குமந்த நிமிடத்திலோ வியர்த்து நிற்பேன்.


நண்பர்கள் தவிர்த்து என் தனிமைக் கூட்டில் இருக்கையில் நம் காதல் விசுபரூபமெடுத்தது, தகதகவென தங்கச் சிறகுகளும் முளைத்ததடி அதற்கு. தயக்கக்கூடுடையும் சீக்கிரமே, என் காதல் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உன் முன்னே வந்து நிற்கும். எக்கணமும் நேரலாம் இந்த இனிய விபத்து, தயாராய் இரு, அவ்வளவே!

காதல் வளர்வது இவ்விதம் என்றால், காதல் வெளிப்படுத்துதல் வண்ணத்துப் பூச்சியொன்றை பிடிக்கும் அனுபவத்திற்கு சமம். எப்படியென்கிறீர்களா...

வேறெதிலோ உன் கவனம் தோய்ந்திருக்கும், உன் முன்னே வந்து தன் அழகு காட்டி தூரப்பறக்கும். பிடிக்க நினைத்து களத்தில் இறங்கினாயோ தீர்ந்தாய்.

உன்னை சலனப்படுத்திய சிந்தனை ஏதுமின்றி கைக்கெட்டும் கிளையொன்றில் அமரும்.
அருகில் செல்வாய்... உயரப் பறந்து உச்சிக் கிளையமரும்.
அங்குமிங்கும் அலைக்கழிக்கும்...
சலித்துப்போய் வந்தமர்வாய்... உனை உரசிக் கொண்டு பின்னாடியே வந்து நிற்கும்.
பிடித்தேயாக வேண்டுமென்று ஆசை மறுபடியும் துளிர்க்கும்.

அது போலத்தான் அகம் உரைத்தலும். காதல் சொல்ல தக்க தருணம் பார்த்து நிற்பாய், தனிமை கிட்டாவண்ணம் அலைக்கழிக்கும் நண்பர் குலாம். தனிமை கிட்டும்போதோ தைரியம் பறந்து போய் உச்சிக் கிளையமர்ந்து கொள்ளும். ஏதேதோ உளறிக் கொட்டி மீள்வாய்.

சொல்லாக் காதலுடன் சொர்க்கமே போனாலும், நரகம்தான் என்று அலுத்துக் கொண்டு வந்தமர்வாய். "வேறேதோ சொல்லனும்னு வந்த போல... என்ன விஷயம்" என்று பின்னாடியே வருவாள். உச்சிக் கிளையமர்ந்த தைரியம் வந்து ஒட்டிக் கொள்ள மறுக்கும். மேலண்ணத்தில் நாக்கு ஒட்டிக் கொள்ள, தலையசைத்து இல்லையென்று அவ்விடம் நீங்குவாய்.

அசாத்திய பொறுமை, நிதானம், விடாமுயற்சி மற்றும் கொஞ்சம் தைரியம், காதல் வெளிப்படுத்த தேவைப்படுவன இவை. இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுக கெஞ்சிற்று, என்னிதயம் குத்திக் கிழித்த ரணம் ஒன்று. சூடான ரத்தம் கொப்புளித்துக் கொண்டு இன்றும் ஆறாமல் இருக்கும் அந்த
ம்...

வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சி பற்றி வகுப்பெடுத்து முடித்த அறிவியல் ஆசிரியர் ஆறுமுகம், மறுநாள் வகுப்புக்கு வண்ணத்துப் பூச்சியொன்றை பிடித்து நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி, பாகம் குறித்து வரச் சொன்னார்.

மறுநாள் எல்லா நோட்டுப் புத்தகங்களும் அவரவர் மேஜை மேல் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. முன் வரிசையிலிருந்து ஒவ்வோர் நோட்டுப்புத்தகமாக பார்த்து வந்தவர், மலர்விழியின் அருகில் வந்ததும் நின்றார். "எந்திரி" என்றார் அதட்டும் குரலில், நடுங்கியபடியே எழுந்து நின்றாள் அவள். "என்ன இது?" கேள்விக்கே மிரண்டு பின் வாங்கினாள். அவர் காண்பித்த நோட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் படம் அழகாக வரையப்பட்டு பாகம் குறிக்கப்பட்டு இருந்தது.

"கைய நீட்டு", என பிரம்பை கையிலெடுத்தார். புறங்கையில் நட் நட்டென்று... ஒவ்வோர் அடிக்கும், கை உதறி, தொடை நடுவே வைத்து, கண்களில் நீர் தேக்கி பின்னும் கை நீட்டும் துடிப்பில் ஏதோவொன்று என் மனசு பிசைந்தது.

என் வீடு இருக்கும் அதே தெருவில்தான் மலர்விழியின் வீடும். மதிய இடைவேளையின் போது, "பட்டாம்பூச்சி புடிக்க தெர்லன்னா என்னை கேட்டுருக்கலாம்ல" என்றேன் கொஞ்சம் கழிவிரக்கத்துடன்.

"இல்லடா... புடிச்சேன், ஆனா கொன்னு நோட்ல ஒட்ட மனசே வரல அதான்... அழகாதானேடா வரஞ்சுருக்கேன் நீயே பார்" என்றாள். சிவந்து லேசாக வீங்கிய புறங்கையில் ஊதி, "வலிக்குதா" எனக் கேட்கையில் என் கண்ணீல் துளிர்த்த கண்ணீரின் காரணம் இன்றுவரை எனக்கு விளங்கவில்லை.

நான் வண்ணத்துப்பூச்சி பிடிக்கையில் உதிர்ந்த சிறகும், என் விரலில் ஒட்டிய வண்ணமும் நினைவுக்கு வந்து இம்சித்தன. நான் கொன்ற வண்ணத்துப் பூச்சிக்கு அவளிடம்தான் மன்னிப்புக் கேட்டேன். பிராயச்சித்தமாய் என் வீட்டுத் தோட்டத்தில் மேலும் ஒரு ரோஜாச்செடி நட்டு வளர்க்கச் சொன்னாள்.

இயற்கை ரசிக்க, உயிர்களிடத்தில் அன்பு செய்ய, கருணை வழிய, கவிதை பொழிய எனக்கு கற்றுத் தந்தாள் மலர்விழி. தவளை அறுப்பதை தவிர்க்கவே உயிரியல் தவிர்த்து கணிணியல் பயின்றோம். பள்ளி இறுதியாண்டு வரை அவளின் அருகாமை சாத்தியப்பட்டது. பட்டப்படிப்பு படிக்க அவள் சென்னை செல்ல, பக்கத்து ஊர் கல்லூரிக்கு நான் சென்றேன். தீபாவளி, பொங்கல், கல்லூரி விடுமுறை மாதங்கள் மலர்விழி வரவால் இன்னும் விசேஷமாகும்.

கறுப்பு செய்தியுடன் விடிந்த அந்த நாளை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவள் மரணச் செய்தி கேட்டு ஊரே துடித்துப்போனது. ஈவ் டீசிங் என்றார்கள். ஆணினமாய் பிறந்ததற்கு முதன்முதலாய் வெட்கினேன். அவள் சிறகு பிய்த்தவனை கொன்று விட மனது துடித்தது. ஜெயிலுக்கே சென்றேன் அந்த மிருகத்தை சந்திக்க.

"நான் அவளை மனசார காதலிச்சேன் சார்... அவளுக்கு என்னை பிடிக்கல, எனக்கு அவள விட மனசில்ல... தொடர்ந்து துரத்தினேன்... விட்ருக்கனும் சார்... பிடிக்கலன்ன உடனே விட்ருக்கனும்... தப்பு பண்ணிட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா, அவகூட பழகுன ஒவ்வோர்த்தர்ட்டயும் மன்னிப்பு கேட்கனும்... எங்க எங்கம்மாவே என்னை மன்னிக்க மாட்டேன்னுட்டாங்க... நீங்களாவது மன்னிப்பீங்களா" என்று அழுதான். ஜெயில் வாழ்க்கை அவனை ஞானியாக்கி விடலாம். எனினும் முடியும்போது ஒரு ரோஜாச்செடி வளர்க்கச் சொல்லி வந்தேன்.

ஆறாத அந்த காயத்தின் எச்சரிக்கையுணர்வையும் மீறி என்னுள் காதல் வளர்ந்து விட்டது. என் தயக்கங்களை துடைத்தெறிய நான் தயார். எனினும் வண்ணத்துப்பூச்சி பிடிக்க எனக்கு மனதில்லை. உதிர்ந்த சிறகையோ ஒட்டிய வண்ணத்தையோ காண எனக்கு சக்தியில்லை. ரோஜாச் செடியொன்று கணக்கை நேர் செய்துவிடும் என்றெனக்கு தோன்றவில்லை.

என் கையில் மலருடன் காதல் சொல்லி காத்திருப்பேன். எனைப் பிடிக்குமாயின் வந்து காதல் தேன் அருந்து அல்லது உதிராத உன் வண்ணச் சிறகுடன் என்னைக் கடந்து போ.

5 comments:

Anu said...

Rasu
idhula anda butterfly samabavam mattum un lifela nadandha unmai kadainu ulagukku eppa terivikka pora

பொன்ஸ்~~Poorna said...

உண்மைக் கதையா ராசு? நல்லா சொல்லி இருக்கீங்க..

இப்போ தான் மரணம் என்னும் தலைப்பில் போட்டிகள் முடிஞ்சது.. இதையும் போட்டிருக்கலாம்..

ராசுக்குட்டி said...

அதுக்குதான் முயற்சி பண்ணினேன் பொன்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவாகவில்லை. சிபியார் மற்றும் உங்கள் புண்ணியத்தில் இப்போதாவது வந்திருக்கிறதே!

கொஞ்சம் உண்மை...கொஞ்சமே கொஞ்சம் கற்பனை!

அனிதா.. உண்மையா கற்பனையான்றது தெரிவதினால் எதுவும் மாற்றமிருக்க போகிறதா என்ன?

Anonymous said...

ராசு, உதிர்ந்த சிறகும் ஒட்டிய வண்ண்மும் நல்லா சொல்லி இருக்கீங்க. அதுவும் கவித்துவமாக...நிறைய எழுதுங்கள். எதிர்பார்க்கிறோம். முடிந்தால் தனிமடலிடுங்கள். கதைப்போம்.

சத்தியா said...

கதையை வாசித்த போது என் மனதில் ஏதோ ஓர் சோகம் ஒட்டிக் கொள்கிறது.

ம்... நன்றாக எழுதி இருக்கின்றீகள். வாழ்த்துக்கள்.