68 : ஒரு துளி வீரம்!

உன் கண்கள் பார்த்தே
காதல் வளர்த்த நாளெல்லாம்
கனவைப் போல் இருக்கிறதடி
என் நாவென்னும் வாளோ
கண்ணீர் குருதி பாராமல்
சுழலுவதை நிறுத்துவதில்லை
சில சமயம் பார்த்தபின்னும்
உன் கோபக் கண்களில் புன்னகை கீற்றொன்றை
காண்பதற்கு கோமாளியாய் வேஷமிட்டிருக்கிறேன்
முன்னொரு வசந்தத்தில்
கொஞ்சமிருக்கும் உன் சுயத்தையும்
வடித்து விடும் நோக்குடனே
பாய்கிறது என் வார்த்தை அம்புகள்
உன் முகம் வாடினாலே
உருகிப் போய்
குழந்தையாய் பாவித்து
கொஞ்சியதெல்லாம் நானேதானா
ஆண்மையின் ஆணவமும் - என்
ஆளுமையின் இயலாமையும்
உறைந்து நிற்கிறது
ஒரு துளியாய்
உன் கண்ணில்




