Wednesday, November 22, 2006

56 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு - தகவலறிக்கை



நண்பர்களே உங்கள் அனைவரிடமும் அளவளாவி அனேக நாட்கள் ஆகிவிட்டது எனவே முதலில் வணக்கம், அனைவருக்கும்!

அடுத்து சாஷ்டங்கமாய் வுளுந்து மன்னிப்பும் கேட்டுர்றேன்... கோவை வலைப்பதிவர் சந்திப்பை பெரிய அளவில் நடத்தமுடியாமல் போனதற்கு. சின்னதோ பெரிதோ நடந்ததை தமிழ்கூறும் வலையுலகின் பார்வைக்கு வைக்கின்ற மரபிற்க்கேற்ப...இதோ!

ஏதோ பழைய ஞாபகத்தில் லாலி ரோடு, அரோமா பேக்கரின்னு போட்டாச்சு, எதேச்சையா அந்தப் பக்கம் போய் பார்த்தா அரோமா ஆராதனா-வா மாறிப்போச்சு. இதென்னடா பெரிய குளறுபடியா போச்சேன்னு கணிணி மையத்திற்கு ஓடியாந்து வர்றேன்னு சொன்னவங்க பேரெல்லாம் பார்த்து தனிமடல் போட்டு தொலைபேசி எண் வாங்கி ரயில்நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கே.ஆர்.பேக்ஸ்க்கு சந்திப்பு மையத்தை மாத்தியாச்சு. அப்புறமும் ஒரே உறுத்தல் யாரும் நேரா லாலி ரோடுக்கே போய் ஏமாந்து வந்துருப்பாங்களோன்னு??!! ஒரே ஆறுதல் இதுவரைக்கும் யாரும் அப்படி மடலிட்டு திட்டாதது.

அடுத்தது என்னுடைய கைப்பேசி எண்ணை தெரிவிக்க முடியாமல் போனது அதனால் வரவேண்டுமென்று நினைத்தவர்களுக்கு இலகுவான தொடர்பு என்பது இல்லாது போயிற்று. இந்தக் குறைகளையும் மீறி சந்திப்புக்கு வருவதாய் சொன்னவர்கள்


புதுமாப்பிள்ளை ராசா
நாமக்கல் சிபி
குமரன் எண்ணம்
சுப்பையா வாத்தியார்
ப்ரியன்
சுதர்சன்.கோபால்
முரட்டுக்காளை
கோவை.ரவீ
சம்பத்

ப்ரியன் சேரநாட்டுக்கு திடீரென பயணிக்க வேண்டியிருந்ததாலும், எதிர்பாரா விருந்தினர் வருகையால் சுதர்சன்.கோபால்-ம் வரமுடியாது போயிற்று. முரட்டுக்காளை, கோவை.ரவீ, சம்பத் ஆகியோரை தொடர்பு கொள்ள விட்டுப்போனதால் அவர்களையும் சந்திக்க முடியாது போயிற்று அன்றைய தினத்தில். மேலும் சிலரும் கலந்துகொள்வதாய் இருந்து கடைசிநேரத்தில் முடியாது போயிற்று.

குமரன் எண்ணம் முதலில் ஆஜர்-ங்கோன்னாரு அப்புறமா கோவை ரெமோ - ஜெமோ சிபியும் சேர்ந்தார். பிரம்புகளை உடைக்கிற கண்டிப்பான வாத்தியார்கள் மத்தியில் நம்ம சுப்பையா வாத்தியார் ரொம்ப அன்பானவருங்க. தீபாவளி பலகாரங்களோடு அன்னிக்கு என்ன பேசலாம்-ன்ற அஜெண்டாவோட வந்தாரு. பல நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு இருக்காரு அதெல்லாம் பத்தி சொல்லிட்டுருந்தாரு. அஜெண்டாவோட வந்தவரு அதையெல்லாம் பத்தி பேசறதுக்குள்ள அர்ஜெண்டா கிளம்பிட்டாரு.

இன்னோரு டீ அடிச்சு முடிச்ச நிமிஷத்துல ராசா மல்லு வேட்டி கட்டி மாப்பிள்ளையா வந்தாரு. பல சரித்திர நிகழ்வுகளை சொல்லி தமிழ் மணம்வீசும் வரலாற்றுப் பாடம் எடுத்தாரு. குமரன் எண்ணத்திற்கும் - குமரனுக்கும் இடையே அடிக்கடி குழப்பிக்கிட்டேன் நான். நாமக்கல் சிபியும் பல விஷயங்கள் சொல்லிட்டுருந்தாரு. மறுக்காவும் டீ குடிச்சிக்கிட்டோம்.

மொத்தம் 60-70 மணித்துளிகள் நீடித்த சந்திப்பு எல்லாருக்கும் மனநிறைவை தந்ததாகவே நினைக்கிறேன். கடைசியா ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டோம். (வாத்தியாரய்யா தந்த தீபாவளி பலகாரம் கடைசியா யார் கைக்கு போச்சு...என்ன இருந்துச்சு..எப்படி இருந்துச்சு) எல்லாருமே பொதுவா சொன்ன சில கருத்துக்கள்

* தனிமனித தாக்குதல்களை ரசிக்கமுடிவதேயில்லை
* கருத்து சுதந்திரத்திற்கும் வரையறைகள் இருக்கின்றன
* மத/இன/ஜாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்குமுன் அவரவர் சுயமதிப்பீடு செய்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும்
* டோண்டு Vs போலிக்கு தீர்வாக கருதுவது - "Free-யா விடு மாமே" ன்னு கண்டுக்காம இருக்றதுதான்

நெடுநாள் முன் நடந்ததாலும், என்னுடைய இயல்பான ஞாபக மறதியாலும் இன்னும் சில-பல விஷயங்களை விட்டிருக்கலாம், வந்தோர் பின்னூட்டங்களில் சேர்க்கவும்.

விடுமுறையில் கணிணி பக்கம் நிமிஷக் கணக்கில்தான் செலவளிக்க முடிந்தது மேலும் மூன்று வார விடுமுறையில் வேலைகள் நிறைய சேர்ந்துவிட்டன எனவேதான் இந்த தாமதம். ஏண்டா போட்டிக்கு கதையெல்லாம் எழுத தெரியுது, இந்த சந்திப்ப பத்தி எழுத இவ்வளவு நாளான்னு கேட்பவர்களுக்காக... இன்னோரு தபா, மன்ச்சிக்கங்கபா!

இந்த சந்திப்பை பற்றி நான் என்ன நினைக்கிறேன்?
இதுகாறும் வெறும் பெயர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். இனி அதனினும் மேம்பட்ட திருப்தி கிடைக்குமென்று நினைக்கிறேன்! இனி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள திட்டம்!

அவ்ளோதான் இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!

Friday, November 17, 2006

55 : இலவசங்களின் விலை - தேன்கூடு போட்டிக்கு

Photobucket - Video and Image Hosting

என்ன பெரிய கருப்பா அடுத்த மாசம் பட்ஜெட் தாக்கல் பண்ணனும் எல்லாம் ரெடி பண்ணிட்டியா... எதிர்க்கட்சி காரனெல்லாம் கண்ல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு காத்துருக்கானுங்க என்ன குத்தம் கண்டு பிடிக்கலாம்னு

என்னங்கய்யா இப்படி சொல்லிட்டிங்க என்ன நம்பி எவ்வளவு பெரிய பொறுப்ப ஒப்படச்சுருக்கிங்க...துண்டு விழாத அளவுல பட்ஜெட் போட்ருக்கங்கய்யா விவரம் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு பார்த்துட்டு சொல்லுங்க

மந்திரிங்க கணக்க காமிச்சு மத்தில இருந்து ஒரு ஆயிரம் கோடி வாங்குனோம் ஆனாலும் பத்தாதேய்யா எப்படி சமாளிச்ச

கஷ்டமாத்தான் இருந்துச்சுங்கய்யா... போன வருஷம் இலவச வேஷ்டி சேலை குடுத்த வகையிலயே ஒரு 500 கோடி துண்டு விழுந்துச்சு. 1000 கோடிய குடுத்துட்டு டில்லிக்காரன் கூட்டு வரிய அமுல் படுத்தனும்னுட்டான் அதுல ஒரு 1300 கோடி துண்டு விழுந்துச்சு ஆனா 1000 கோடி மானியம் கிடைச்சது அப்படி இப்படின்னு ஒரு 800 கோடி துண்டு விழறாப்ல இருந்துச்சு அப்புறம்தான் அரிசி கொள்முதல் விலைல கிலோவுக்கு 6ரூபாயும் கரும்புல டன்னுக்கு 400 ரூபாயும் குறைச்சு எடுத்தோம் அதுல கணக்கு நேராகி 1118 கையிருப்பு இருக்கு

பிரமாதம்யா... எட்டாங்கிளாஸ் படிச்சவனா இருந்தாலும் எடுத்துக்காட்டா ஒரு பட்ஜெட் குடுத்துருக்க...

***

செட்டியாரய்யா நம்ம ரேஷன் கார்ட குடுத்தீகன்னா நாளைக்கு மந்திரி வேஷ்டி சேலை தர்றாராம் வாங்கிட்டு தந்துருவனுங்க

காளி அந்த சிவப்பு கலர் பேரேட எடு... முனியா பழைய பாக்கி 350 இருக்கு இப்ப ஒம் மச்சான் செத்தாம்னு கணக்குல சேந்தது ஒரு 400 இருக்கு எப்ப அடைக்கப் போற அந்தக் கணக்க எல்லாம்

ரெண்டு மாசத்துல அறுவடை இருக்குங்கய்யா அதுவரைக்கும் வாய்தா குடுங்க அறுவடைல எப்படியாச்சும் அடச்சுப்புடறேன். அப்புறம் எழவுக்கு வந்த துணிமணியே நெறய இருக்குங்கய்யா... என் கார்டுக்கும் என் தங்கச்சி கார்டுக்குமா சேத்தின்னா 2 வேஷ்டி 2 சேலை வருமுங்க மந்திரிமார் குடுக்கறத அப்படியே இங்கன கொண்டாந்து குடுக்கறேன், வரவு வச்சிக்கங்கய்யா

எப்படில ரெண்டுரெண்டு வரும் ஓ இன்னும் ஒம் மச்சான் செத்தது கணக்குல வரலயாக்கும்... பெரிய ஆளுதாம்ல நீயி. சரி சரி இந்தா ரேஷன் கார்டு... இலவச வேஷ்டி சேலை என்ன எதுனா மட்டமான சரக்கா கொண்டு வந்து தருவானுங்க சரி அத இங்க கொண்டாந்து காளிகிட்ட கொடுத்திடு ஒரு நூறு ருபா வரவு வச்சிக்குவான்... உன் சொமை குறையுமேன்றதுக்காக சரின்னு சொல்றேன்

எலேய் காளி சாயங்காலம் நூறு ருபா வரவு வச்சுக்கிட்டு முனியண்ட்ட இருந்து ஞாபகமா ரேஷன் கார்ட வாங்கி வச்சுக்கனும் சரியா நான் MLA வீட்டுக்கு போய் மந்திரிய பாத்துட்டு வந்தர்றேன்

***

என்ன கணபதி செட்டியார் எப்படி இருக்கிங்க

வாங்க ரெங்கசாமியண்ணே... MLA ஐயா எப்படி இருக்காரு

ஐயா நல்லா இருக்காரு சரி வர்ற 19ம் தேதி அமைச்சரய்யா முதல்வர் எல்லாம் வரப் போறாங்க தெரியுமில்ல

அப்படியா ரொம்ப சந்தோஷம்... நம்ம பையன் வேலை விஷயத்தையும் அப்படியே காதுல போட்டு வைங்கண்ணே இந்த சமயத்துல

செஞ்சிரலாம் செஞ்சிரலாம்... உங்களுக்கில்லாமலா அப்புறம் 50 நோட்டுக்குள்ள 500 வேஷ்டி 500 சேலை ரெடி பண்ணிக்கங்க MLA ஆபிஸ்ல 50க்கு பில் குடுத்துட்டு நாளைக்கு செக் வாங்கிக்கங்க. செக் வந்ததும் வழக்கம் போல நம்ம கணக்குல 10 வரவு வச்சிக்கங்க. தீபாவளி பாக்கி நேராயிடும்ல...

அதுக்கென்னண்ணே பண்ணிக்கிரலாம்... பையன் வேலை விஷயம் மட்டும் மறந்துராதீங்க

சரி சரி நான் மறக்கல.. இளைஞரணி வரும்போது 2000-மாவது எழுதுங்க அப்படின்னாதான் ஐயாகிட்ட பேசவாவது முடியும் வரட்டுமா.

***

ஹலோ MLA சந்தானம் பேசறேன்

யோவ் நான் அமைச்சர் பெரிய கருப்பன் பேசறேன். உன் தொகுதில என்னய்யா நடக்குது... இன்னிக்கு தலைவர் கூப்ட்டு எகிறு எகிறுன்னு எகிறிட்டாரு.

என்ன விஷயம் அண்ணாச்சி...

நம்ம சாதிக்காரன்னு உன்ன MLAவாக்கி அழகு பாத்தா... பட்டினி சாவு நெறய ஆகிப்போச்சாம்லய்யா... மாத்து துணி கூட இல்ல, அவன் அவன் மருந்தக் குடிச்சிட்டு செத்துப் போறாம் அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு நெற்றிக்கண்ல கிழிகிழின்னு கிழிச்சுட்டாம் அதுலயும் உன் தொகுதிலதான் நெறயன்னு என்ன புடிச்சி வறுத்துட்டாரு

அமைச்சரே... என்ன சொல்றீங்க, நீங்க சொன்னீங்கன்னுதானே..

அதெல்லாம் பேசிக்கிட்டு இருக்காத... என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது எதயாவது செஞ்சு நம்ம கட்சி பேரக் காப்பாத்து முக்கியமா தலைவர் மனசு குளிர்ற மாதிரி எதாவது செய். அவ்ளோதான் சொல்வேன்

சரிங்கய்யா

பி.ஏ ரெங்கசாமிய கூப்பிடய்யா... யோவ் அமைச்சர்ட்ட பேசி முதல்வர் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணிக்க. நெற்றிக்கண்ல ஒரு பக்க விளம்பரம் ஒண்ணு ரெடி பண்ணிக்க முதல்வர் தலைமையில் இலவச வேஷ்டி சேலை வழங்கறதா செய்தி பண்ணிக்க துயர் துடைக்க வந்த தூயவனே அது இதுன்னு நாலஞ்சு பஞ்ச் வச்சுக்க சரியா

அப்புறம் 500 வேஷ்டி சேலை ரெடி பண்ணிக்க தொகுதி நிதிலருந்து 50,000 எடுத்துக்க. இளைஞரணிட்ட சொல்லி விழா செலவுக்கு 15,000 வசூல் பண்ணிக்க சொல்லு

****
என்னடா காளி இன்னிக்கு மதுரைல இருந்து சரக்கு வந்துருச்சா... சரி விலை எழுதி வில்லையெல்லாம் ஒட்டிரு

என்ன விலை எழுதட்டுங்கய்யா

என்னடா வேலைக்கு சேந்து ஆறுமாசம் ஆச்சு இன்னும் இதப் போயி எங்கிட்ட கேட்டுகிட்ட இருக்க? சரி அந்த ஃபைல எடு

எடுத்தியா... வீனஸ் வேஷ்டிக்கு நேரா என்ன போட்ருக்கு

50 எண்ணம் 980ன்னு இருக்குங்கய்யா

சரி பூனம் சேலைன்னு போட்டு அதுக்கு எதுத்தாப்ல என்ன இருக்கு

100 எண்ணம் 2520ன்னு இருக்குங்கய்யா

அந்த லாரிக்கார கிருஷ்ணம்பய இத குடுத்துட்டு எவ்வளவு வாங்கிட்டுப் போனான்

அம்பது ருபா வாங்கிட்டுப் போனான்

நீ ஒரு வெவரங்கெட்டவன் நாப்பது ரூபாதான்னு அடிச்சுப் பேச வேணாமா...நீயெல்லாம் எப்படித்தான்... சரி சரி வேஷ்டிக்கு 45ரூபான்னு எழுதிக்கோ சேலைக்கு 65ன்னு போட்டுக்கோ

அப்படியே கல்லாப் பெட்டிலருந்து ஒரு பத்து ருவா எடு. முனியன் வீட்டு கேதத்துக்கு போய்ட்டு வந்தர்றேன். நீ கடையப் பூட்டி சாவிய ஆச்சிக்கிட்ட குடுத்திடு. ஆமாம் இன்னிக்கு அவன் கணக்குல எவ்வளவு பற்று.

3 சேலை, 3 வேஷ்டி-துண்டு எடுத்தான் 420 வந்துச்சு 20 தள்ளி 400 எழுதிருக்கேங்க.

***
அம்மா... செட்டியாரய்யா... இருக்காகளா

என்ன முனியா காலங்காத்தால வந்துருக்க...

இல்லம்மா, வீட்ல ஒரு காரியம்... ம்... வந்து... ஐயா இருக்காகளா

யார் இறந்தது...

என் மச்சினந்தானுங்கம்மா... கரும்பு போட்ருந்தான், அறுப்பு முடிஞ்சதும் மில்லுல ரேட்ட கொறச்சுட்டாங்க அறுப்பு கூலிகூட கட்டலன்னு பூச்சி மருந்த எடுத்துக் குடிச்சிட்டாம் பாவிப்பய... பச்சப் பச்சப் புள்ளைங்கம்மா... எந்தங்கச்சிய கண் கொண்டி பாக்க முடியல... சொல்லும்போதே துண்டெடுத்து வாய் பொத்தி குலுங்க ஆரம்பித்தான் முனியன்.

ஏங்க... இங்க செத்த வந்துட்டு போங்க

கேட்டுகிட்டுதான் இருந்தம்டா முனியா... சாயந்தரம்தான தூக்குவீங்க வந்தர்றேன்... இப்ப எதுனா வேணுமா

கேதத்துக்கு கோடித் துணி எடுக்கணும்ங்கய்யா அதுக்குத்தான் இத்தனை காலையில எழுப்ப வேண்டியதா போச்சு...

சரி சரி காசு எதுவும் வச்சுருக்கியா

இல்லங்கய்யா... ரேஷன் கார்டு எடுத்துட்டு வந்திருக்கேன்

***

(இந்த கதைய கடைசி பகுதில இருந்து கூட மேல படிச்சிகிட்டு போகலாம்...பெரிசா ஒண்ணும் மாற்றம் இருக்காது)